ஜனாஸா எரிப்பு விடயத்துக்காக இலங்கை மீது சர்வதேச தடைகளை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.
(எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம்
செய்யும் உரிமையை சர்வதேச மட்டத்தில் போராட்டங்களை மேற்கொண்டு அதனை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில் தவறு இல்லை.
ஆனால் இதனைக் காரணமாகக் கொண்டு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தடைகளை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் நோக்கமாக இருக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் இன்று (28)கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித விஞ்ஞான ரீதியிலான ஆதாரமும் இல்லை. இதனை உலக சுகாதார அமைப்பு உட்பட சர்வதேச ரீதியில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதித்துள்ளன. இலங்கை அரசாங்கம் அதனை அனுமதிக்காமல் சுகாதாரத் துறையின் மீது சாட்டிவிட்டு காலம் கடத்தி வருகிறது.
அத்துடன் சர்வதேச நாடுகளிலிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் எமது உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களால் முடிந்த முயற்சிகளை செய்கின்றனர். ஆனால் இதனை காரணமாகக் கொண்டு சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு தடைகளை விதிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க கூடாது.
ஏனெனில் எதிர்காலத்தில் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் இங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு அதன் பாதிப்பு ஏற்படுவதுடன் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சமூகம் என்ற வகையில் எமக்கு அந்த அவப்பெயர் ஏற்படும்.
எனவே எமது உரிமையை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். மாறாக இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்கவைக்கப்பது எமது நோக்கமாக இருக்கக்கூடாது என்றார்.
Comments
Post a Comment