இலங்கையில் பலவந்த ஜனாஸா எரியூட்டல் சர்வதேசத்தின் கவனத்தை முன்னரை விடவும் வெகுவாக ஈர்த்துள்ளது ; SLMC அறிக்கை
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு (ஜனாஸா) பலவந்தமாக எரியூட்டிவரும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாதெனவும், அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்தி, நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் அறிக்கை விடுத்த உடனேயே , அதனை வரவேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இரண்டு ட்விட்டர் பதிவேற்றங்களை மேற்கொண்டிருந்தார்.
முதலாவது, ட்விட்டர் பதிவில், கொவிட் - 19 தொற்றாளர்களின் சடலங்களுக்கு (ஜனாஸா)பலவந்தமாக எரியூட்டுவதை கைவிட்டு நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் நால்வர் அடங்கிய ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிக் குறிப்பிட்டு, அந்த அறிக்கையையும் முழுமையாக இணைத்திருந்தார்.
அடுத்த ட்விட்டர் பதிவில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட்க்கு நன்றி தெரிவித்து, இலங்கையில் மரணிக்கும் கொவிட் தொற்றாளர்களின் ஜனாஸாக்களை பிற நாடொன்றில் (மாலைதீவு) அடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக ஏற்படக் கூடிய மனித உரிமை மீறலின் பாரதூரத்தை அவரது நாட்டு மக்களுக்கு உணர வைத்ததற்கான அன்னாரின் நடவடிக்கையை சிலாகித்துக் கூறியிருந்தார்.அஹமட் ஷஹீட் மாலைதீவின் முன்னாள் வெளிநாட்டமைச்சராகக் கடமையாற்றியவர் ;முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர்.
இவ்விரு ட்விட்டர் பதிவுகளையும் கடந்த கடந்த செவ்வாய்க் கிழமை( 26 ), முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஒன்றன் பின் ஒன்றாக பதிவேற்றம் செய்திருந்தார்.
அவற்றை இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் முக்கியஸ்தர்கள் பலர் பார்வையிட்டுள்ளதோடு,அவற்றிற்கு பின்னூட்டல்களையும் இட்டிருந்தனர்.
இலங்கையில் பலவந்த ஜனாஸா எரியூட்டல் தொடர்கின்ற நிலையில் ,பிரஸ்தாப விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை முன்னரை விடவும் வெகுவாக ஈர்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.
நண்பர்களுடன் பகிரவும்:
Comments
Post a Comment