திருகோணமலையில் நகைக்கடையொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது.
திருகோணமலை என்.சீ. வீதியில் நகைக்கடையொன்றில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை
கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நகைக்கடையில் கடந்த 8ஆம் திகதி 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது திருகோணமலை கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகு ஒன்றில் வந்துள்ள கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இந்த கொள்ளையைத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனவும் தற்போது தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சு எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக திருகோணமலை தலைமையக பொலிஸார் தொடர்ந்துடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment