சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை :இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

 

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை :இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான வழிமுறையொன்றை தயாரித்து , அதன் ஊடாக இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அண்மையில் ரக்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் 11 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன.

அந்த செய்திக்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த சிறுவர் இல்லம் தொடர்பில் கண்காணிப்பினை முன்னெடுத்திருந்தது.

இதன் போது இனங்காணப்பட்ட காரணிகளுக்கமைய பெற்றோரின் பாதுகாப்பினை இழந்த நிலையில் , இது போன்ற சிறுவர் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (27) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இவ்விசேட கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆணையாளர் நாமல் லியனகே , சப்ரகமு மாகாணத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆணையாளர் ரவீந்திரா மாலனி , சிறுவர் மற்றும் மகளிர் குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய நன்னடத்தை , சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளுக்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான வழிமுறையொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சிறுவர் இல்லங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து , அதற்குரிய தீர்வுகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இரு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !